மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு திடீரென அவரது தோழி சசிகலா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முமுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமானவர்கள் பங்கேற்று விநாயகரை தரிசித்தனர். தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு நேற்று இளவரசியுடன் காரில் வந்திறங்கினார் சசிகலா. இதனால், அந்த இடம் பரபரப்பானது. அவர் வீட்டின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்த ஜெய் கணபதி விநாயகரை வழிபட்டார்.
சசிகலா திடீரென போயஸ் கார்டன் வந்ததால் அங்கு ஏராளமானோர் குவிந்துவிட்டனர். பின்னர் விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் சசிகலா. இதையடுத்து, வீட்டில் உள்ள பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களுக்கு மத்தியில் ஜெயலலிதா படத்தை வைத்து சசிகலா வழிபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.