`சசிகலா மீது இன்று வரை மரியாதை இருக்கிறது'

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமில்லை என ஓபிஎஸ் வாக்குமூலம்
`சசிகலா மீது இன்று வரை மரியாதை இருக்கிறது'

"சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மீது மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது. சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுகளை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று 2வது நாளாக இன்று ஆஜரானார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், "2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது. ஆனால் மாலை 5.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ தலைவர் பிரதாப்பை சந்தித்தது பற்றி நினைவில்லை. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஓபிஎஸ்சிடம் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை கேட்டதும் அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தானே என செந்தூர் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், 'ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால்தான் ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன்" என்றார்.

சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும், அபிமானமும் உள்ளதா? என்று ராஜா செந்தூர் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, சசிகலா மீது தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது. சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுகளை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in