`சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே': ஓபிஎஸ்- ஈபிஎஸ்சை விளாசிய சசிகலா

சசிகலா
சசிகலா

"அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது" என சசிகலா வேதனையுடன் கூறினார்.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து தேவை என்பதால் அதிமுகவின் கட்சி சின்னம் தரக்கூடிய படிவம் ஏ மற்றும் பி ஆகியவை அதிமுக தலைமை சார்பில் வேட்பாளர்களுக்கு தரப்படவில்லை. அதனால் அதிமுக தொண்டர்கள் கட்சி சின்னமான இரட்டை இலை இல்லாமல் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா இது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று சசிகலா சுற்றுப்பயணம் செய்து அவரது ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது மரக்காணத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா, "அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு கழக தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர் பதவியில் நீடிப்பதற்காக, அடிமட்ட தொண்டர்கள் பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம்? இது கழக தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம். ஒருசிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா?

உங்களுடைய சுய விருப்பு, வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே. புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா?

ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதே போன்று புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்தால், அதுவே இருபெரும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக் கடனாகும்.

திமுகவினர் நமது இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் போய், தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு அவர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திமுகவினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால் எதற்கும் மயங்காத எண்ணிலடங்காத தொண்டர்களை கொண்டது நம் அதிமுக இயக்கம். திமுகவினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்றுதான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்தால் இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காவே இயங்கும் என்ற அம்மாவின் எண்ணம் ஈடேறும்" என பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in