``நேரம் வரும்போது சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்'' என சசிகலா தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் 114 -வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த சசிகலா, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "பேரறிஞர் அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டனர். அதேபோல் அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம்.
ஓ.பன்னீர்செல்வமும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நிச்சயமாக அதிமுகவுக்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும். நேரம் வரும்போது அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல. எடப்பாடி பழனிசாமி எப்படி இருக்கிறார் என நீங்கள் தான் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.