
வரும் 15, 16-ம் தேதிகளில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " எம்ஜிஆரின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய ஜெயலலிதா ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக சசிகலா தொடர்ந்து பயணிக்க உள்ளார். வருகின்ற 15-ம் தேதி காலை 11 மணிக்கு தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவு சென்றடைந்து, மாலை 4 மணியளவில் அங்கிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார்.
கவுந்தம்பாடி நான்கு ரோடு, கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர் திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார். அதனைத்தொடர்ந்து 16-ம் தேதி மாலை 4 மணிக்கு மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பேருந்து நிலையிலிருந்து புரட்சிப்பயணத்தை தொடங்கும் சசிகலா, திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பேரூந்து நிலையம் அருகிலும் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
இந்த பயணத்தில் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள், ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.