‘சனாதனமே’ அடங்கல... அதுக்குள்ள ‘சந்தானம்’!

என்னய்யா... இப்புடி பண்றீங்களேய்யா..!
சந்தானம்
சந்தானம்

‘‘ஏண்டா டேய்... இந்த சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திக்கிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதான நீ?’’

‘‘நா அந்த ராமசாமி இல்ல...’’

- இது விரைவில் வெளிவர உள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் வரும் டயலாக். இந்த டயலாக்குடன் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

“கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள்” என்று தீர்க்கமாகச் சொன்ன - பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியைத்தான் இவ்வாறு கிண்டல் செய்கின்றனர் என்று, அப்போதே சிலர் முணுமுணுத்தனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இப்படத்தின் கதாநாயகன் சந்தானம் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், பொங்கல் வைக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் சந்தானம். அப்போது, அதே சர்ச்சை டயலாக் மீண்டும் வருகிறது. ‘‘ஏண்டா டேய்... இந்த சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதான நீ?’’ என்று பின்னணியில் குரல் கேட்க... கேமரா பக்கம் திரும்பும் சந்தானம், ‘‘நா அந்த ராமசாமி இல்ல...’’ என்று கூறி, கற்பூர தட்டை ஏந்தி நிற்கிறார்.

சந்தானம்
சந்தானம்

‘சாமி சத்தியமா’ இது பெரியாரைத்தான் குறிப்பதாக நெட்டிசன்கள் கொந்தளிக்க, திக, திமுக அனுதாபிகள் வலைதளத்தில் சந்தானத்தை வறுத்தெடுக்க, ‘எதுக்கு சாமி (ராமசாமி அல்ல) வம்பு’ என வீடியோவை நீக்கிவிட்டார் சந்தானம்.

சந்தானத்தின் புரொமோ வீடியோ மட்டுமே வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சர்ச்சை டயலாக்கை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்களா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

அது கிடக்கட்டும்... பெரியாரை நேரடியாகவே கலாய்த்திருக்கும் ஒரு படத்தை தன்மான, இனமானத் தலைவர்கள் இத்தனை நேரம் விட்டுவைத்திருக்கமாட்டார்களே... தேரை இழுத்து தெருவில் விட்டிருப்பார்களே என்று பார்த்தால், அதற்கும் காரணம் இருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த படத்தை வெளியிடுவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் வழிநடத்தப்பட்டு வந்த சாட்சாத் ரெட்ஜெயன்ட் மூவீஸ்.

‘‘ஏண்டா டேய்... என்று கேட்டு கலாய்க்கிறான். இப்படி ஒரு படத்தை வெளியிட்டுத்தான் ஆகவேண்டுமா...’’ என்று ரெட் ஜெயன்ட்டை கேட்க வேண்டிய அந்தத் தலைவர்கள், ‘‘அதான் அந்த ராமசாமி இல்லன்னு சந்தானம் சாரே சொல்லிட்டாரே...’’ என்ற ரேஞ்சுக்கு முட்டுக்கொடுத்துவிட்டு போய்விட்டார்களாம். பிழைக்கத் தெரியாத பெரியார் அனுதாபிகள் சிலர் மட்டும், “படத்தில் அந்த டயலாக்கை நீக்க வேண்டும்” என்று இன்னும் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் ‘‘சனாதனம் என்பதை ஒழிப்பதே முதல் வேலை’’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் பிப்ரவரி 13-ம் தேதி ஆஜராகச் சொல்லி உதயநிதிக்கு பீகார் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதியின் சனாதனப் பேச்சே காரணம் என்றும் கூறப்பட்டது. கேலோ இந்தியா விளையாட்டுகளை தொடங்கிவைக்க வருமாறு சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை அழைத்தார் உதயநிதி. அதை ஏற்று பிரதமரும் தமிழகம் வந்து விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார். அவருடன் உதயநிதியும் கலந்து கொண்டார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்கவிழாவில்...
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்கவிழாவில்...

2 ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக அண்ணாமலை சமயம் பார்த்து ரிலீஸ் செய்த 2 ஆடியோக்களுக்கும் திமுக தரப்பில் இருந்து பதில் இல்லை. அப்படியானால் பாஜகவோடு சமாதானமாகப் போகிறதா திமுக என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள ‘சனாதன’ பிரச்சினை அடங்குவதற்குள், அடுத்து உதயநிதிக்கு ‘சந்தான’த்தால் பிரச்சினை வந்திருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in