இந்து மதம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த தி.மு.கவுக்கு இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜக கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இச்சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செந்தில்குமார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வட மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதால் செந்தில்குமார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான சமாஜ்வாதி முதல் முறையாக இந்து மதம் குறித்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாதி மூத்த தலைவரும், அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவருமான ஐ.பி.சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'யாராவது இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாக பேசினால், முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், சில இந்துக்கள், தங்களது கடவுள், வேதங்கள், புராணங்கள், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து தினமும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். தி.மு.க. தலைவர்கள் இந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்.
அவர்கள் இந்து மதத்தை துறந்துவிட்டனரா? கிறிஸ்தவ மதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், பிறகு எப்படி இந்து மதத்தை விமர்சிக்கின்றனர். இந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடுவதுடன், விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். இதற்கு ஒரு முடிவுகட்ட ஒரு கண்டிப்பான சட்டத்தை இயற்ற வேண்டும் அல்லது இந்து மதத்தின் கண்ணியம் அழிக்கப்படும்' இவ்வாறு ஐ.பி.சிங் கூறியுள்ளார்.