
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துப் பேசியுள்ளார். விஜயகாந்த்தின் கையை பிடித்து அவர் முத்தம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார். அவருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் கம்பீரமாக அரசியலில் வலம் வந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்த் தற்போது வீட்டில் முடங்கி கிடப்பது அவரது கட்சித் தொண்டர்களை மட்டுமே தமிழக மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
தேர்தல் காலத்தில் விஜயகாந்த்தை நோக்கி அரசியல் கட்சி தலைவர்கள் சென்ற காலம் போய் தற்போது கூட்டணிக்காக தேமுதிக பிறக் கட்சியை தேடிப்போகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு உதாரணம் தற்போது நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவரது கன்னங்களை தடவி தனது உருக்கமான அன்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் விஜயகாந்த்தை இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்திருக்கிறார். அப்போது விஜயகாந்த்தின் கையை பிடித்து சந்திரசேகர் முத்தமிடுகிறார். இந்த உருக்கமான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.