நவம்பர் 6‍-ல் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நவம்பர் 6‍-ல் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நவம்பர் 6-ம் தேதி பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதோடு, காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அழைப்பு முடிவு செய்திருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது இதை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த காவல்துறை கண்காணிப்பாளர், பேரணிக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார், இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும், நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் வாதிட்டார். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, நீதிமன்றம் அனுமதி வழங்கிய தங்களது ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கமுடியாது என குற்றம்சாட்டினார்.

கடந்த 2013-ல் அம்பேத்கர் பிறந்த நாளன்று பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

யாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பமாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதன் அர்த்தம் புரியவில்லை என்றும், மனவலியை ஏற்படுத்துவதாகவும் பிரபாகரன் தெரிவித்தார். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதுதான் காவல்துறையின் கடமை என்று பலமுறை அறிவுறுத்தி உள்ளதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும், புதுச்சேரியிலும் அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான ஊர்வலத்திற்கு தமிழகத்தில் மட்டும் எவ்வாறு அனுமதி மறுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது என்றும், பொது மக்களின் நலன் தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றும் கருத்தில் காவல்துறை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். காந்தி ஜெயந்தி கொண்டாடக்கூடாது என காவல்துறை கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். தவறாக உருவகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் குறுக்கிட்டு, காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பியபோது, அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பில் தர்போதைய சூழலில் அன்றைய தினத்திற்கு பதிலாக மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்தி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடைக்கு பிறகு சென்னை வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜகவினருக்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன எனவும், என்.ஐ.ஏ. சோதனை, பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றிற்கு பிறகு 52,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, தற்போதைய செய்திகள், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அறிவுறுத்தினார். அதன்பின்னர் நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்தும்படி உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அனுமதி மறுத்தால் காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in