தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: நிபந்தனையுடன் நடத்த ஐகோர்ட் அனுமதி

தமிழகம் முழுவதும்  ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: நிபந்தனையுடன்  நடத்த ஐகோர்ட் அனுமதி

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தின 75-ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த சுப்ரமணியன், கடலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,, அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ் சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் எந்த பாதையில் செல்கிறார்கள் என தகவல்கள் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமைஉரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாம் என்றும், ஆனால் அனுமதி மறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாகவும், இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிறன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல என்றும், நாங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் குறிப்பிட்ட ஒரு இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in