
"மோடி யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் கதை முடிந்துவிடும். சசிகலா, ஓ.பி.எஸ் தலையில் கை வைத்தார். இருவர் கதை முடிந்துவிட்டது. நல்லவேளை எடப்பாடி பழனிசாமி தப்பித்துவிட்டார்" என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சீண்டி பார்க்கிறார். சனாதனம் பற்றி பேசுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஆன்லைன் தடை சட்டத்தினை எதிர்க்கிறது. ஆகையால் தான் ஆளுநருக்கு வாய் இருக்கிறது, காது கேட்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை காது, வாய் முக்கியமில்லை. இதயம் தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இதயம் அனுமதிக்கிறதா? ஆளுநருக்கு இதயத்திற்கு பதில் களிமண் இருக்கிறாதா?. பலர் ஆன்லைன் ரம்மியால் பணத்தினை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை தடுக்க சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினால் அனுமதி தர ஆளுநர் மறுக்கிறார். இதையெல்லாம் எடுத்து சொன்னால் திமுக மிரட்டும் பாணியில் இருக்கிறது என அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர். பாஜக தமிழக அரசியலை வேறு விதமாக நடத்த பார்க்கிறது. திமுக ஆட்சியை ஏதாவது செய்யலாம் என்று பார்க்கின்றனர். திமுக ஆட்சி மீது கை வைத்தால் பாஜகவினர் இருக்க மாட்டார்கள். நான் சொல்லவில்லை, மக்கள் சொல்கின்றனர்.
மோடி யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் கதை முடிந்துவிடும். சசிகலா, ஓ.பி.எஸ் தலையில் கை வைத்தார். இருவர் கதை முடிந்துவிட்டது. நல்லவேளை எடப்பாடி பழனிசாமி தப்பித்துவிட்டார். ஏப்ரல் 14-ம் தேதி தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணமாலை கூறுகிறார். மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன். அவர் காவல்துறை பதவியில் இருந்த போது புரிந்த ஊழல் பட்டியலை வெயிடுவேன்" என்றார்.