அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்: சசிகலா வழக்கு நவ.8-க்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்: சசிகலா வழக்கு நவ.8-க்கு ஒத்திவைப்பு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவ.8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்தக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், சிவில் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு என்றும், தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டதாக குறிப்பிட்டார் . கட்சியின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து விசாரணையை நவ.8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in