திருப்போரூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் அடுத்துள்ள கன்னகப்பட்டு, சிதம்பரம் சுவாமி மடக்குளம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான குளம் ஒன்று உள்ளது. சபரிமலைக்குச் செல்பவர்கள் இந்தக் குளத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் குளிப்பது வழக்கம். இந்நிலையில் கேளம்பாக்கம் அருகேயுள்ள சதன் குப்பம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய மூன்று பேர் குளிப்பதற்காகக் குளத்தில் இறங்கியுள்ளனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததாலும், குளத்தில் ஆழம் அதிகம் என்பதாலும் அவர்கள் குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி முருகேஷ், உதயகுமார் மற்றும் விஜய் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் ’ எனத் தெரிவித்துள்ளார்.