`மிட்டாய் கொடுத்து எம்எல்ஏ ஐயப்பனை அழைத்துவிட்டனர்'- ஓபிஎஸ்சை விமர்சிக்கும் ஆர்.பி.உதயகுமார்

செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார்
செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார்கோப்பு படம்

எம்எல்ஏ ஐய்யப்பன் ஓபிஎஸ்சிடம் சென்றது தவறு என்றும், திருவிழாவில் முட்டாயைக் காண்பித்து குழந்தையை அழைத்துச் செல்வது போல எம்எல்ஏ ஐயப்பன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை கே.கே. நகரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அம்மாவின் கனவுகளை எல்லாம் நனவாக்கியவர் எடப்பாடியார். எவ்வளவோ சோதனைகளை சாதனையாக மாற்றியவர் எடப்பாடியார். அவர், சுய நலமிக்கவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டார். அதிமுக எடப்பாடியார் தலைமையில் பொது நலப் பாதையில் பயணித்து வருகிறது.

ஓபிஎஸ்சுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதது போல, 'தொண்டர்கள் என்னிடம் உள்ளனர்' என்று எதுவுமே புரியாத நபரைப் போல் வாய்ப்பாடு பாடி வருகிறார். ஓபிஎஸ் பொதுக் குழுவில் பங்கேற்க முடியாததற்கு காரணம், போக்குவரத்து நெரிசல் என குழந்தைத் தனமான பதிலை சொல்கிறார். எனவே, அவர் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு உண்டான தகுதியை இழந்துவிட்டார்.

பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஓபிஎஸ் செய்து வருகிறார். என்ன நடந்தாலும் இறுதி வெற்றி எடப்பாடியாருக்கு தான் கிடைக்கும். ஓபிஎஸ் நிராயுத பாணியாக இருப்பதால் அவ்வப்போது புலம்பி வருகிறார். அதிமுக தலைமைப் பதவி மீது எனக்கு ஆசையில்லை என ஓபிஎஸ் நாடகப் பேச்சாக பேசி வருகிறார். அவரின் நாடகப் பேச்சு மக்களிடம் எடுபடாது. ஈபிஎஸ் பலமாக இருக்கிறார். ஓபிஎஸ் பலவீனமாக இருக்கிறார். ஓபிஎஸ் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை வெளியிடுவது சட்ட ரீதியாக நடக்கும். 2001-ல் ஓபிஎஸ் முதலமைச்சர் ஆனது உழைப்புக்கு கிடைத்தது என சொல்கிறார். ஆனால், எதனால் ஓபிஎஸ்சுக்கு முதல்வர் பதவி கிடைத்தது என ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு தெரியும். எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ்சிடம் சென்றது தவறு. திருவிழாவில் முட்டாயைக் காண்பித்து குழந்தையை அழைத்துச் செல்வது போல எம்எல்ஏ ஐயப்பன் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

காலம் வரும், உண்மை நிலவரத்தை ஓபிஎஸ் பக்கம் உள்ளவர்கள் அறிவார்கள். உண்மையான நிலவரத்தை, ஓபிஎஸ் புரட்சிப் பயணம் செல்லும் போது தான் அறிவார். அவருக்கு ஒரு விதமான பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. புலி வருகிறது என சொல்லி வருகிறார். அது புலியா? பூனையா? என்பது பின்னரே தெரிய வரும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in