`5 மாவட்ட மக்களை திரட்டுவோம்'- தமிழக அரசை எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்!

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

"முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோதபோக்கை திமுக அரசு தொடருமேயானால் எடப்பாடியார் தலைமையில் ஐந்து மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக, வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

ரூட் கர்வ் மூலம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் மூன்று மதகுகள் மூலம் திறந்தனர். இதன் மூலம் ஐந்து மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை திமுக அரசு நிகழ்த்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதும் மூன்று முறை முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. பழனிசாமி தற்பொழுது முதலமைச்சராக இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது, திமுக அரசு கேரளா அரசின் அழுத்தத்தை தூக்கி எறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

கேரள முதலமைச்சர் வியாழக்கிழமை கடிதம் எழுதுகிறார், அதற்கு வெள்ளிக்கிழமை பேசி வைத்த நாடகம் போல் விடியா திமுக அரசு தண்ணீரை திறக்கிறது. கேரள அரசு அழுத்தத்திற்கு அடிபணியக் கூடாது என்று விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த பிறப்புரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும். முல்லை பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி விவசாயிகளை திமுக அரசு நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது.

மேலும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோதபோக்கை திமுக அரசு தொடருமேயானால் எடப்பாடியார் தலைமையில் ஐந்து மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in