`போதை விழிப்புணர்வில் எம்எல்ஏக்களை பங்கேற்க சொல்வது கேலிக் கூத்து'- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஆர். பி. உதயகுமார்
நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஆர். பி. உதயகுமார்

"போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதனாவர்கள் மற்றும் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்தது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை விட முன்வருவரா" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவேடகம் அருகே வைகை ஆற்றில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் வினோத்குமார் உடல் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக, வைகை ஆற்றில் ஆறு பேர் குளிக்கச் சென்றனர். இதில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டு, இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராணுவ வீரர் வினோத்குமார் உடல் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, வைகை ஆற்றில் வரும் தண்ணீரை குறைத்தால் எளிதாக மீட்கலாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று, தண்ணீரின் அளவைக் குறைத்தார்.

ஏற்கெனவே பலமுறை அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், இதுபோன்ற காலங்களில் ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது, தடுப்பு வேலி அமைத்திட வேண்டும் என்று கூறினார். இதை செய்திருந்தால் இதுபோன்ற துயரமான சம்பவம் நிகழ்ந்திருக்காது.

முதலமைச்சர் போதை ஒழிப்பு குறித்து கலைவாணர் அரங்கத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் 1 கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இதில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் மனம் அழுத்தத்தால், குடும்ப சுமையால், கூடா நட்பால் போதைப் பொருட்களுக்கு அடிமையாக வருகின்றனர்.

ஏற்கெனவே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், திமுக ஆட்சி அமைந்த 5-வது மாதத்திலே தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து சட்டமன்றத்திலும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்ற சம்பவங்கள் போதைப் பொருட்களால் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் பேசிய வார்த்தைகள் அழகாக உள்ளது. ஆனால், செயல்பாட்டில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதைப் பொருள் குறித்து முதலமைச்சர், காவல்துறைக்கு உத்தரவிட்டாலே போதும் ஒரே நாளில் வேட்டையாடி தடுத்து நிறுத்த முடியும். இது குறித்து விழிப்புணர்வு நடத்தப்படும் என்று கூறுகிறார், இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது ஏன் டாஸ்மாக் கடையில் கூட இது குறித்து விழிப்புணர்வு எழுதி வைத்திருப்பார்கள். விழிப்புணர்வில் சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது கேலிக் கூத்தாக உள்ளது.

சமூக அக்கறையோடு அரசு இதில் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி வாசல்களில் போதைப் பொருள் விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த போதைப் பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க முன்வர வேண்டும். அதே போல் போதைப்பொருள் விற்பனை செய்பவரின் எத்தனை பேரின் சொத்துகள் முடக்கப்பட்டது என்பதை வெள்ள அறிக்கை வெளியிட முதலமைச்சர் முன்வர வேண்டும்" என்றார்.

மேலும், "ஏற்கெனவே மதுரையில் கனமழையால் உயிரிழந்த நான்கு குடும்பத்திற்கு இதுவரை நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. தற்போது, இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பாக ராணுவ வீரர் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. ஆகவே இருவரின் குடும்ப சூழ்நிலை கருதி உயிரிழந்த இரண்டு குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் நிவாரண உதவியை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in