இது இறுதி தீர்ப்பா?- கேள்வியால் ஓபிஎஸ்சுக்கு எதிராக கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்

இது இறுதி தீர்ப்பா?- கேள்வியால் ஓபிஎஸ்சுக்கு எதிராக கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்

"தீர்ப்பின் மூலம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆன்மா எடப்பாடியிடம் தான் உள்ளது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என இன்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்‌. அப்போது பேசிய அவர், "அம்மாவிற்கு பிறகு அதிமுக எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடியார் காப்பாற்றி, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கனவுகளை நிறைவேற்றி வழி நடத்தினார். ஒன்றரை கோடி தொண்டர்களை ஒருங்கிணைத்து அம்மாவின் கனவை நனவாக்கினார் எடப்பாடியார்.

இந்த இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். பல்வேறு சாதனைகளை செய்து மக்கள் நெஞ்சங்களில் நிறைந்த தலைவராக எடப்பாடியார் திகழ்கிறார். தாய்த்தமிழ் நாட்டு மக்கள் பாதுகாவலராக இருக்கும் எடப்பாடியாருக்கு நீதியரசர்கள் தந்த மகத்தான தீர்ப்பு இந்த தீர்ப்பாகும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆன்மா எடப்பாடியாரிடம் உள்ளது என்பதை காட்டும் வகையில் நீதிபதிகள் கொடுத்தது தான் இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. கிளைக்கழகம் தொடங்கி, தலைமைக் கழகம் வரை எடப்பாடியாருக்கு ஆதரவு உள்ளது.

மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி, அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி. வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. நியாயம், சத்தியம், தர்மம், உண்மைத் தொண்டர்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு. பொதுக்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 99 சதவீதம் பேர் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடியாரின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு உள்ளது" என்றார்.

தொடர்ந்து, இது இறுதி தீர்ப்பா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. இந்த தீர்ப்பு மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அறிந்தும் அறியாதது போல, தெரிந்தும் தெரியதது போல உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக எடப்பாடியார் தலைமையில் மக்கள் பணியாற்ற தயாராக உள்ளது" என்று பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in