
மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பரப்பு மிகக் குறைவாக இருப்பதால், தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு கடந்த மாதம் 7-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். அவர்களது 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த 11 மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர்கள் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகு விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.