35 கோடி பட்ஜெட்டில் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவரது மகன் அன்புமணி முயன்று வருகிறார். இந்தப் படத்தை இயக்க இரண்டு இயக்குநர்கள் முயன்று வருகிறார்களாம்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் ஜூலை 25, 1939-ம் ஆண்டு சஞ்சீவிராயக் கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ். இவரின் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு அன்புமணி என்ற மகனும் ஶ்ரீகாந்தி, கவிதா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ராமதாஸ், தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.
அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று கூறி, வன்னியர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் `வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1980-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி - வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ வேண்டும் என்று கேட்டு, சாலை மறியல் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினார். ராமதாஸின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்படுபவையாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அவரது செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கின.
இந்த நிலையில், ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க அவரது அன்புமணி திட்டமிட்டு வருகிறாராம். இந்தப் படத்தை 35 கோடி பட்ஜெட்டில் படமாக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்தப் படத்தை இயக்க சேரன், அன்புமணியோடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இயக்குநர் தங்கர்பச்சானும் முயன்று வருகிறாராம்.