போராட்டத்தை அறிவித்த டாக்டர் ராமதாஸ்: பின்வாங்கிய காரைக்கால் வானொலி நிலையம்!

போராட்டத்தை அறிவித்த டாக்டர் ராமதாஸ்: பின்வாங்கிய காரைக்கால் வானொலி நிலையம்!

அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2-ம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காரைக்கால் வானொலி நிலையத்தின் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கண்டனத்தைப் பதிவு செய்தார். அதில், பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பைக் கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மொழி, கலாச்சாரம், தொழில் முறை ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான வானொலி நிகழ்ச்சிகளைக் கொண்டு வருவதே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தத்துவத்திற்கு எதிரான செயல் ஆகும்” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பழையபடி பண்பலை வரிசையில் தமிழ் நிகழ்ச்சிகள் பழையபடி ஒலிபரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர் ராமதாஸின் ட்விட்டர் பதிவில், “இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காரைக்கால் வானொலி மூலமான இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது கைவிடப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து இந்தி நிகழ்ச்சிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும். இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் இந்தித் திணிப்பு முயற்சிகளில் பிரசார் பாரதி நிறுவனம் ஈடுபடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in