`இந்த திட்டத்தைத் தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?’- முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

`இந்த திட்டத்தைத் தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?’- முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

``தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு முன்வரவேண்டும்'' பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும்  செயல்படுத்த முடியாது; பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும்; நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் முறியடித்து ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே  மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாலயப் பிரதேசம் அதனை இணைத்துக் கொண்டுள்ளது. இமாலய சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாகப் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இமாலயப் பிரதேச அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் பழைய ஓய்வூதியத் திட்டம்  செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், இமாலயப் பிரதேசத்தில் இதுவரை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வாக்குறுதி அளித்த எந்த கட்சியும் அதைச் செயல்படுத்துவதில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பரிந்துரைக்க 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ம் தேதி மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது? பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்து விட்டது. இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில்,  இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in