காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வேட்புமனுவில் தனது சொத்துகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக தெரிவித்துள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது சொத்துக்கள் மற்றும் வழக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு என்ன? என்பது தெரிய வந்துள்ளது. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனது கையில் ரூ.55 ஆயிரம் ரொக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கிகளில் ரூ.26,25,157 சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பங்குச் சந்தையில் ரூ.4,33,60,519 உள்ளதாகவும், மியூச்சுவல் ஃபண்ட் வழியாக ரூ. 3,81,33,572 உள்ளதாகவும், தங்க பத்திரம் வழியாக ரூ.15,21,740ம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட வகைகளில் ரூ.61, 52, 426 முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு ரூ.4,20,850 மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும் அவர் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மொத்தமாக ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து ராகுல் காந்தியிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ரூ.11,15,2,598 மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அதன்படி மொத்தம் ரூ.20,39,61,862 மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் கூட ராகுல் காந்தியிடம் சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ராகுல் காந்திக்கு எதிராக 18 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் மோடி பெயர் குறித்து விமர்சித்த வழக்கும் ஒன்று என்று பிரமாண பத்திரத்தில் ராகுல் காந்தி தகவல்களை தெரிவித்துள்ளார்.