
இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியிருக்கும் ராகுல் காந்தி மகாத்மா காந்தியடிகள் வந்த பள்ளிக்கும், தவறாமல் சென்றார். அங்குள்ள மாணவ, மாணவிகளிடமும் கலந்துரையாடினார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு கடந்த 1937-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள், ராஜாஜியோடு வந்தார். பள்ளியின் வருகைக் குறிப்பேட்டிலும் இதுகுறித்து எழுதி கையெழுத்துப் போட்டுள்ளார் மகாத்மா காந்தி. இந்நிலையில் கன்னியாகும்சரி அகஸ்தீஸ்வரம் பகுதியில் இருந்து இன்று இரண்டாவது நாள் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி இந்த பள்ளியில் காலையில் நடைபயணத்தை முடித்தார்.
பள்ளியில் காங்கிரஸின் ஜவஹர் பால் மஞ் அமைப்பின் சார்பில் நடத்திய ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் தலைப்பிலான ஓவியப் போட்டி நடந்தது. இது இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில் வென்றோருக்கு பரிசு வழங்கிய ராகுல் காந்தி தொடர்ந்து அப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து ராகுல் காந்தியிடம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணன்,இதே பள்ளிக்கு மகாத்மா காந்தி வந்திருப்பது தொடர்பான பள்ளி ஆவணக் குறிப்பையும் காட்டினார். இதைப் பார்த்ததும் ராகுல் காந்தி நெகிழ்ந்து போனார். அப்போது அங்கு இருந்த காங்கிரஸாரோ, அந்த காந்தி நாட்டு விடுதலைக்காக நடையாக நடந்தார். இந்த ராகுல் காந்தி நாட்டு ஒற்றுமைக்காக நடக்கிறார். இது ஒற்றுமைக்கான யாத்திரை”எனக் குறிப்பிட்டனர். பள்ளி வளாகத்தில் ராகுல்காந்தி மரக்கன்றும் நட்டார்.