20 ஆயிரம் காலியிடங்கள்; இந்தி, ஆங்கிலத்தில் கேள்வித்தாள்: தமிழில் கிடையாதா என வெங்கடேசன் கேள்வி?

20 ஆயிரம் காலியிடங்கள்; இந்தி, ஆங்கிலத்தில் கேள்வித்தாள்: தமிழில் கிடையாதா என வெங்கடேசன் கேள்வி?

20 ஆயிரம் காலியிடங்களுக்கான பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வித்தாள் கேட்கப்படும் என்று அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநில மொழிகளில் கேள்வித்தாளை உறுதி செய்யக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய பணியாளர் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20 ஆயிரம் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிஷன் பணி நியமன அறிவிக்கையை 17/9/2022 அன்று வெளியிட்டுள்ளது. இது மிகப்பெரும் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளுக்கான தேர்வு ஆகும். ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. பணி நியமன தேர்வு கேள்வித்தாள் இரண்டு மொழிகளில் மட்டுமே இந்தி, ஆங்கிலம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மொழிகளுக்கு இடமில்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. இந்தியல்லா மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது ஆகும் . மேலும் இப்படி பணி நியமனம் பெறப்போகிற ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவையை ஆற்றப் போகிறார்கள். ஏற்கெனவே உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித்துவம் தெரிவு பட்டியல்களில் மிக குறைவாக உள்ளது என்ற பிரச்சினைகள் பல துறைகளின், நிறுவனங்களின் பணி நியமனங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் பணி நியமனங்களும், மொழிச் சமத்துவம் கடைபிடிக்கப்படாததால் அத்தகைய பாரபட்சத்தை உள்ளடக்கியதாகவே அமையப் போகிறது. எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஸ்டாப் செலக்சன் கமிஷன், மாநில மொழிகளிலும் கேள்வித்தாள்களை உறுதி செய்ய அறிவித்துமாறு வேண்டுகிறேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in