சசிகலா குறித்த கேள்வி: அதிமுக முன்னாள் அமைச்சர் மவுனம்

சசிகலா குறித்த கேள்வி: அதிமுக முன்னாள் அமைச்சர் மவுனம்

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுகவினரே குரல் எழுப்பி வருகின்றனர் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ பதில் எதுவும் அளிக்க மறுத்து கிளம்பிச் சென்றார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவிக்கான தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிமுகவுக்கு 9, பாஜகவுக்கு ஒன்று என 10 கவுன்சிலர்கள் உள்ளனர். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட தலைவர் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும். நீதிமன்றமும் தேர்தலை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. அதிமுக உறுப்பினர்களை நான் கடத்திவிட்டதாக தன் மீது பொய் வழக்கு போடப்பட்டன. உறுப்பினர்களை யாரும் கடத்தவில்லை. தேர்தல் ஜனநாய முறைப்படி நடைபெறும் என நம்புகிறேன்" என்றார்.

அப்போது, அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுகவினரே குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் கிளம்பிச் சென்றார். எருமபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் அதிமுகவுக்கு 9 உறுப்பினர்கள், திமுகவுக்கு 5 உறுப்பினர்கள், பாஜகவுக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in