அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு: இறங்கி வந்தார் ஏ.சி.சண்முகம்

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவு என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக சார்பில் வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.  அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை இணைத்து வேட்பாளரை அறிவிக்க வேண்டும் அல்லது  பாஜகவே  நேரடியாக போட்டியிடப் போவதாக கெடுபிடி காட்டி வந்தது. அதற்கு தோதாக  புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள்  பாஜக வேட்பாளருக்குத்தான் தங்கள் ஆதரவு என்று கூறியிருந்தன.

இதனால் அந்தக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலே ஈபிஎஸ் தரப்பில்  வேட்பாளர் அறிவிக்கப்பட்டு அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்றுதான்  அதிமுக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவு என்று ஒருவழியாக  பாஜக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல்  புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் அதிமுக வேட்பாளருக்கு தங்கள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தேசிய ஜனநாயக கூட்டணியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தரும் அதிமுக வேட்பாளருக்கு புதிய நீதி கட்சியின் மாநில,  மாவட்ட, தொகுதி, பகுதி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் முழு ஆதரவைத் தந்து வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக ஏ.சி.சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஜி.கே வாசன்,  டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில்  தற்போது ஏ.சி.சண்முகமும்  அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in