பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அவருக்கு இந்த வகை பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மானுக்கு அகில இந்திய அடிப்படையில் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்குமாறு சிஆர்பிஎப் -பிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தானி நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கியிருப்பதால் முதல்வரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அம்மாநில முதல்வர் பகவந்த் மானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பரிந்துரைத்தது. கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவில் வசிக்கும் பகவந்த் மானின் மகள் சீரத் கவுர் மானுக்கு காலிஸ்தான் ஆதரவு சக்திகளிடமிருந்து மிரட்டல் அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது. காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியும், வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங் சமீபத்தில் கைது செய்யப்பட்டதால், பகவந்த் மானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று உளவுத்துறை சொல்லப்படுகிறது.