``நீட் குறித்து தனது கருத்தை மருத்துவத்துறை பற்றி அடிப்படை தெரியாதோர் விமர்சிப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது'' என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பில் நடைபெற்ற ‘ஹெல்த் கனெக்ட்-புதுச்சேரி’ என்ற கருத்தரங்கு நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நீட் தேர்வு குறித்து தனது கருத்தை சிலர் விமர்சிப்பது குறித்து ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் "நல்ல மருத்துவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளோர் மருத்துவத்துக்கு வர நீட் பெரும் உதவி செய்கிறது. அதனால்தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். ஆனால் மருத்துவத்துறை குறித்து அடிப்படை தெரியாதோர் இதில் விமர்சனம் செய்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இணையத்தில் என்னைப் பற்றி சிலர் மோசமாக விமர்சித்து எழுதுகிறார்கள். எனது மருத்துவ முகத்தை அறியாமல் அவர்கள் என்னைப் பரிகசிக்கிறார்கள்" என வெளிப்படையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், லாப நோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு சேவை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும் எனவும், மரபணு மற்றும் அரிதான நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்