
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஒருமையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவப்படத்தை எரித்து கடலூர் மாவட்டத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழுக்கு திமுக முடிவுரை எழுதுவதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார்.
'என்னை கடலூருக்குள் விடமாட்டேன் என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடலூர் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? இதோ கடலூருக்குள் வந்தாகி விட்டது. உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் கொஞ்ச நாளைக்கு எம்எல்ஏவாக இருப்பீர்கள். ஆண்டு அனுபவித்து விட்டு ஓடிப் போய் விடுங்கள். அடுத்த உங்களை வீழ்த்தப் போவது உறுதி. டெபாசிட் கூட கிடைக்காமல் ஓடிப் போகப் போகிறீர்கள்' இன்று ஒருமையில் பேசியிருந்தார்.
இது திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் அந்தந்த ஒன்றியங்களில் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.