
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இதன் ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் இங்கு சட்டப்பேரவை தேர்தல் நாளை(நவ.17) நடைபெறுகிறது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான இருமுனை போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நிலையில், நேற்று மாலையுடன் அது முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தாதியா தொகுதி வேட்பாளருக்காக ஆதரவு திரட்டும் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஜோதிராதித்ய சிந்தியாவை குறி வைத்து தாக்கிப் பேசினார். "உங்களுக்கு சிந்தியாஜியை தெரியுமா? அவரை மகாராஜா என்று அழைத்து பழக்கமில்லை. ஆனால் தொண்டர்கள் அவரை மகாராஜா என்று அழைத்தால் தான் நமது வேலைகளை முடித்து கொடுப்பார் என்று கூறுவதுண்டு.
குடும்ப பாரம்பரியத்தை அவர் நன்றாக பின்பற்றியுள்ளார். குவாலியர், சம்பல் பகுதி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார். நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் ஆட்சியைக் கவிழ்த்து விட்டார்," என்று ஜோதிராதித்ய சிந்தியாவை கடுமையாக தாக்கிப் பேசினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜகவில் இணைந்தார். அதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதற்கு பரிசாக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு அவர் துரோகம் செய்துவிட்டதை வைத்துதான் அவரை துரோகி என்று தற்போது பிரியங்கா விமர்சித்துள்ளார்.