‘இணையத்தில் இன்பநிதி படங்கள் வெளியானதுக்கு, அடல்ட் ஆடியோ வீடியோ புகழ் அண்ணாமலையே காரணம்’

காயத்ரி ரகுராம் தாக்கு!
காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

உதயநிதி ஸ்டாலின் மகனின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையவெளியில் பரவுவதன் பின்னணியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இருப்பதாக, அக்கட்சியிலிருந்து வெளியேறிய காய்த்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரனும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகனுமான இன்பநிதி, பெண் ஒருவருடன் இயல்பாக இருக்கும் புகைப்படங்கள் நேற்று மாலை முதல் இணையவெளியில் வலிய பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்வோரில் பலரும் பாஜக அபிமானிகள். மேற்படி புகைப்படங்களில் இன்பநிதி தன் வயதொத்த பெண் ஒருவருடன், அந்த வயதுக்கே உரிய விளையாட்டு போக்கில் பதிவாகி இருக்கிறார். அது அவருடன் படிக்கும் அல்லது பழகும் தோழியாக இருக்கலாம். தனிப்பட்ட வகையிலான அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிய விடப்பட்டதுடன், அவை குறித்து முறைகேடான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அண்ணாமலையுடனான தனிப்பட்ட மோதலில் பாஜகவிலிருந்து வெளியேறி இருக்கும் கட்சியின் முன்னாள் நிர்வாகியான காயத்ரி, இப்படி இணையவெளியில் பரப்பப்படும் இன்பநிதி புகைப்படங்களின் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். குறிப்பாக இன்பநிதியுடன் இருக்கும் பெண்ணை மறைக்காது பொதுவெளியில் வெளியிடுவதன் மூலம், பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற தனது குற்றச்சாட்டை அண்ணாமலை ஆதரவாளர்கள் நிரூபித்துள்ளனர் என்கிறார் காய்த்ரி.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்?’ என்று கேள்வி எழுப்பியதோடு, நிறைவாக, ’அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை’ என்ற சாடலோடு பதிவை முடித்திருக்கிறார்.

திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று அண்ணாமலை தரப்பால் குற்றசாட்டுக்கு ஆளாகிவரும் காய்த்ரி ரகுராம், அண்ணாமலைக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளையும், கேள்விகளை எழுப்பி வருகிறார். ‘ஹனிட்ராப், பிளாக்மெயில் உத்திகள் வாயிலாக தனது உட்கட்சி எதிரிகளை அண்ணாமலை சாய்த்து வருவதாகவும், ’வார் ரூம்’ என்ற ஏற்பாட்டின் மூலம் தனக்கு பிடிக்காத பாஜகவினரின் இமேஜை பொதுவெளியில் டேமேஜ் செய்வதாகவும், அதே வகையில் தன்னையும் கேரட்க்டர் படுகொலைக்கு ஆளாக்கியதாகவும்’ குற்றம்சாட்டுகிறார் காயத்ரி.

நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில்கூட அண்ணாமலை உஷ்ணமானதும், பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் நடத்தியும்கூட ’தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது மற்றும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள திசை திருப்பவே..’ என்றும் காயத்ரி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறார். காயத்ரி சொன்னதுபோலவே அவர் தொடர்பான கேள்விகளை தவிர்த்து வரும் அண்ணாமலை, ’கட்சியிலிருந்து வெளியேறுபவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறேன் என்பதோடு’ முடித்துக்கொண்டுள்ளார். ஆனால் காய்த்ரி அவ்வாறு முடித்துக்கொள்பவரல்ல என்பது அவரது தொடர் தாக்குதல்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in