தமிழக அரசு வைத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடி புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிப்பியாட் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக அரசின் சார்பில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பர பதாகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாத நிலையில் பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி விளம்பர பதாகைகளில் மோடியின் புகைப்படத்தை ஒட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், பாஜகவின் செயலை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்டிருந்த மோடியின் புகைப்படத்தை கருப்பு ஸ்பிரே கொண்டு அழித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற கோட்டூர்புரம் போலீஸார் மோடியின் புகைப்படத்தை அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் இந்த செயல் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.