அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்பார் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சியான காங்கிரஸால் தற்போதைய எண்ணிக்கையில் கூட வெற்றிபெற முடியாது என்று தெரிவித்தார்.
அசாமில் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகித்த பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “காங்கிரஸிடம் எதிர்மறையான அணுகுமுறை உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மே 28ம் தேதி பிரதமர் திறந்து வைப்பார். ஆனால், குடியரசுத் தலைவரே திறந்து வைக்க வேண்டும் என்று சாக்குப்போக்கு கூறி, காங்கிரஸ் அதை புறக்கணித்து அரசியல் செய்கிறது.
அடுத்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டதால், மக்களவையில் தற்போது உள்ள இடங்களில்கூட அதனால் வெற்றிபெற முடியாது. நாடாளுமன்றத்திற்குள் பிரதமரை பேச காங்கிரஸ் அனுமதிப்பதில்லை. இந்திய மக்கள் மோடிக்கு பேசுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். பிரதமரை மதிக்காமல் இருப்பது மக்களின் ஆணையை அவமதிப்பது போன்றது" என்று அவர் கூறினார்.