`திருமாவளவனிடம் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்'- சொல்கிறார் ஜெயக்குமார்

`திருமாவளவனிடம் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்'- சொல்கிறார் ஜெயக்குமார்

"ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதால் ஏதோ சதி திட்டம் இருப்பதாக திருமாவளவன் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பதை போலீஸ் அழைத்து விசாரிக்க வேண்டும்" அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக கொடியை பயன்படுத்தி, அதிமுக உறுப்பினர் அட்டையை போலியாக அச்சடித்து பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபடும் கே.சி.பழனிசாமி மீது முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாத கே.சி.பழனிசாமி, அதிமுகவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு அவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் அவர் மீது புகார் அளித்துள்ளேன்.

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் ஜாதி, மதம், இன மோதல் இல்லாத அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட மதத்தினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பொது மக்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்காமல், அதிமுக மீது இரும்பு கரத்தையும், தீவிரவாத அமைப்புகள் மீது கரும்பு கரத்தையும் தமிழக அரசு காட்டுகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் பேரணி நடத்த அனுமதி கொடுக்கவில்லை. திமுகவின் இரட்டை வேடத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் கடந்த காலத்தை போலவே திமுக ஆட்சி கலைக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

அம்பேத்கர் பிறந்த நாளன்று பாபர் மசூதி இடிப்பும், காந்தி பிறந்தநாள் அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதால் ஏதோ சதி திட்டம் இருப்பதாக திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, திருமாவளவன் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பதை போலீஸ் அழைத்து விசாரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே அதிமுகவின் எதிர்பார்ப்பு எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என மகளிரை அவமானப்படுத்தியதும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் குறவர் மக்களை கொச்சைப்படுத்தியதும், பெரியகருப்பன் ஊடக்கத்தினரை மிரட்டியதும், ஆர்.எஸ்.பாரதி ஊடக வேசிகள் என கூறியதும், துரைமுருகன் அரசு ஊழியர்களை மிரட்டியது, குழந்தை போல் இருக்கும் சென்னை மேயரை அமைச்சர் கே.என்.நேரு படாத பாடு படுத்துவது என திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பொதுமக்களை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர். திமுக ஆட்சியில் தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள் சிலைக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும். முதலமைச்சர் தொகுதி என்பதால் கொளத்தூர் தொகுதி மட்டும் மழையில் மூழ்கக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் வேலை பார்த்து வருகிறார். திமுகவே மூழ்கிற கட்சி தான்" என விமர்சித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in