அதிமுக தலைமை அலுவலகம் முன் கலவரம்: சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தூக்க காவல்துறை ஸ்கெட்ச்!

அதிமுக தலைமை அலுவலகம் முன் கலவரம்: சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தூக்க காவல்துறை ஸ்கெட்ச்!

அதிமுக தலை தொடர்புடையவர்களைப் பிடிக்கத் துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலவரம் வெடித்தது. இதில் 42 பேருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில், ராயப்பேட்டை போலீஸார் கலவரத்தைத் தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் வருவாய் கோட்ட அலுவலர் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இக்கலவரத்தில் தொடர்புடைய ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200பேர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் என 400 நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களைப் பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் தீஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கலவரத்தில் தொடர்புடையவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

குறிப்பாகக் கலவரம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in