
``எல்லாவற்றிற்கும் மத்திய அரசை எதிர்க்கிற திமுக, என்எல்சிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறது?'' என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், நிழல் நிதி அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி, "என்.எல்.சி நிர்வாகம் நெய்வேலியில் விவசாயிகள் நிலத்தினை கையப்படுத்தக்கூடாது. அவர்களுக்கு அங்கு நிலத்தின் தேவையும் இல்லை. தமிழகத்துக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. என்எல்சி நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகாவாட் மின்சாரம் கொடுத்து 5 மாவட்டங்களை அழித்து வருகிறது. என்எல்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தபட்டம் 400 அடி அளவிற்கு சென்றுவிட்டது.
என்எல்சி நிர்வாகத்தினர் 40 ஆயிரம் ஏக்கரை பாலைவனமாக மாற்றியுள்ளது. என்எல்சிக்கு தமிழக அரசு ஆதரவளித்து வருகிறது. மத்திய அரசை எல்லாவற்றிற்கும் எதிர்க்கிற திமுக அரசு இதற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறது? பத்தாயிரம் ஏக்கர் உள்ளது. அதில் மின்சாரம் அடுத்த 30 ஆண்டுகள் வரை எடுக்கலாம்.
என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள கடையடைப்பு பாமக சார்பில் நடத்தப்பட்டது. மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு பிறகும் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால் வேறு விதமான போராட்டத்தை கையில் எடுப்போம் . என்எல்சி நிர்வாகத்தினரால் தமிழகத்திற்கு முதலீடும் வேலைவாய்ப்பும் இல்லை. விவசாயம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீரை பாதுக்காக்க என்எல்சி நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் .
போதைப்பொருட்கள் கொரோனா காலகட்டத்தில் அதிகம் பள்ளிகளுக்குள் வந்துள்ளது. அதனால்தான் தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து காவல்துறையில் தனிப்பிரிவை அமைத்து போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். போதையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதமாதம் தமிழக முதலமைச்சர் தனியாக ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய பாமக கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சியில் தடை சட்டம் கொண்டு வந்தனர். இந்த சட்டம் அமலில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தது. அப்போது ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. அதன்பின் 18 பேர்கள் உயிரிழந்துள்ளனர். வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான தடை சட்டத்தினை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே 10 மாநிலங்களில் தடைச்சட்டம் அமலில் உள்ளபோது 142 நாட்கள் ஆளுநர் எதற்காக கையெழுத்திடாமல் வைத்திருந்தார் ?
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி தீர்வு காண வேண்டும். கலைஞர் கருணாநிதி மீது மிகப்பெரிய பற்று எங்களுக்கு உள்ளது. மெரினா கடற்கரையில் கலைஞருக்கு சமாதி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அதனால்தான் நாங்கள் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றோம்.
அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே கலைஞரின் பேனாவை அமைக்க வேண்டும். கடலில் அமைத்தால் இதை உதாரணமாக கொண்டு மற்றவர்கள் தங்களுக்கும் அனுமதி கேட்பார்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடலில் சிலை அமைக்கக்கூடாது" என்றார்.