எதிர்க்கட்சி என்பதற்காக திமுக அரசின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது!

பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு பளிச் பேட்டி
வழக்கறிஞர் கே.பாலு
வழக்கறிஞர் கே.பாலு

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டி எனும் பாமகவின் அறிவிப்பு, ‘தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகிற கட்சி பாமக’ என்ற விமர்சன மழையில் அக்கட்சியை மீண்டும் மூழ்கடித்துள்ளது. இந்தச் சூழலில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவுடன் ஒரு பேட்டி.

திமுக ஆட்சியின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறோம் என்பதற்காக திமுக அரசின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பாமகவின் கோரிக்கையான வேளாண்மைக்கு தனி பட்ஜெட், நீர்ப்பாசனத் துறைக்கு தனி அமைச்சர், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது, வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகள் 21 பேருக்கு மணிமண்டப அறிவிப்பு போன்றவற்றை வரவேற்கிறோம். இன்னும் சொல்லப்போனால் திமுக கொண்டுவந்ததை அதிமுக ரத்து செய்வதும், அதிமுக கொண்டுவந்ததை திமுக நிறுத்தி வைப்பதுமான போக்கை கைவிட்டு, அதிமுக அரசு கொண்டுவந்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டிருக்கிறது இந்த அரசு.

அதேநேரத்தில், தங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன பல விஷயங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு. சலுகை அறிவிப்புகளைக்கூட விடுங்கள். ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று சொல்லிவிட்டு, அதை செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையிலேயே அதை உரிமை என்று சொல்லிவிட்டு, அதை தர மறுப்பது அநீதி. அதேபோல, மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யாமல் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பது மக்களிடம் மறைமுகமாக பணத்தைப் பறிக்கிற செயல் என்று சொன்ன திமுக, இப்போது அதையே செய்கிறது. இப்போது நிதி நெருக்கடியை காரணம் காட்டி, நாங்கள் கொஞ்ச காலம் அதேபோல பணத்தைப் பறித்துக்கொள்கிறோம் என்கிறார்கள்.

எல்லா விஷயத்திலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற முனைப்போடு முதல்வர் செயல்படுகிறார். ஆனால், பல அமைச்சர்கள், மாவட்ட, வட்டச் செயலாளர்களோ வேறு மாதிரி செயல்படுகிறார்கள். சிலர் ஒரு டாஸ்மாக் கடைக்கு 10 ஆயிரம் தர வேண்டும் என்று வசூல் செய்கிறார்கள். இனிமேல் இதெல்லாம் எங்கள் கண்ட்ரோல் என்று பேசித் திரிகிறார்கள். இதற்கும் ஒரு கடிவாளம் போட வேண்டும்.

ஆளும் அரசு இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு அரசியல் கட்சியுமே சில கோரிக்கைகளை வைத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அரசு எதைச் செய்தாலும் இது எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று பாமக சொந்தம் கொண்டாடுகிறதே?

மற்றவர்களுடைய கோரிக்கை, போராட்டத்தால் வந்த திட்டங்களை பாமக சொந்தம் கொண்டாடுவதாக யாரும் சொல்லவே முடியாது. உதாரணமாக, வேளாண் பட்ஜெட் குறித்து சில விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருக்கலாம். ஆனால், அதைத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், நிழல் வேளாண் அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டது மருத்துவர் அய்யா என்பதை மறுக்க முடியுமா? பெரியார் பிறந்த நாளை சமூகநீதிநாள் விழாவாக கொண்டாடச் சொல்லி நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். திமுக அப்படிச் சொன்னதாக எங்காவது குறிப்பு இருந்தால் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சிக்கிறீர்கள். மத்திய பாஜக அரசின் தவறுகளை அதே வேகத்தில் விமர்சிப்பதில்லையே ஏன்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் விலை உயர்வு போன்றவற்றை பாமக கண்டித்திருக்கிறது. அவற்றின் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெட்ரோல் விலையை தமிழக அரசு லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததுபோல, மத்திய அரசு 5 ரூபாயாவது குறைத்திருக்க வேண்டும்.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரையும் ஒப்பிடுக...

இரண்டு பேருமே தங்களை இன்டலெக்சுவலாகக் காட்டிக்கொள்கிறார்கள். பொருளாதார மேதைகள், நிபுணர்கள் எனறு எண்ணிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒரு பட்ஜெட் போடும்போது, அதனால் ஒரு சாதாரண விவசாயி, சாதாரண குடும்பஸ்தனுக்கு என்ன பயன் என்று தான் மக்கள் பார்க்கிறார்களே தவிர, அவர் எந்த நாட்டில் படித்தார், அவருடைய பின்னணி என்ன என்பதை எல்லாம் மக்கள் பார்ப்பதில்லை. திட்டங்களை நிறைவேற்ற பெரிய பொருளாதாரப் புலியாக எல்லாம் இருக்க வேண்டாம். மக்கள் அன்றாடம் புழங்குகிற மார்க்கெட், டீக்கடை போன்றவற்றுக்குப் போகிறவர்களாக இவர்கள் இருந்தால் போதும். உதாரணமாக, தமிழக நிதியமைச்சர் பெட்ரோல் பங்க்கில் இறங்கிப் பேசுபவராக இருந்தால், இப்படி வெறுமனே பெட்ரோல் விலையை மட்டும் குறைத்திருக்க மாட்டார். டீசல் விலையையும் குறைத்திருப்பார். கட்சியின் தேர்தல் அறிக்கைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது மாதிரியான பேச்சுக்களையும் தவிர்த்திருப்பார்.

அதிமுக கூட்டணியில் இருந்து திடீரென பாமக வெளியேறியதற்கு என்ன காரணம்?

நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தும் விலகவில்லை. இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் பெரும்பாலானவை வடமாவட்டங்கள். தேர்தல் அறிவித்தவுடனேயே வேட்புமனுத்தாக்கலும் தொடங்கிவிட்டதால், வெறும் 5 நாள் அவகாசத்துக்குள் ஒன்றிய கவுன்சிலர் சீட், மாவட்ட கவுன்சிலர் சீட்களில் எத்தனை எங்களுக்கு என்று கூட்டணிக்குள் ஆலோசித்து, ஒருமித்த கருத்து ஏற்பட்டு, போட்டி வேட்பாளர்களைச் சமரசப்படுத்தி வேட்புமனு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதாலும், பாமகவைச் சேர்ந்த நிறைய பேருக்குப் போட்டியிட வாய்ப்புத்தர வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த நிலைப்பாட்டை ஏற்படுத்துள்ளோம். இதனால் அதிமுகவுடன் முரண்பாடு இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை, கூட்டணியிலும் மாற்றமில்லை.

அதிமுக கூட்டணியை ராமதாஸ் விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, அதிமுகவை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்திருக்கிறாரே?

தேர்தல் தொடர்பாக மருத்துவர் அய்யா நடத்திய காணொலி கூட்டத்தில், நானும் பங்கேற்றேன். அதில் அப்படியான விமர்சனங்கள் எதையும் மருத்துவர் அய்யா வைக்கவேயில்லை. ஊடகங்களில் வந்த தவறான செய்தியின் அடிப்படையில் பாமகவை விமர்சிப்பது அதிமுக மூத்த தலைவரான அண்ணன் ஜெயக்குமார் போன்றோருக்கு அழகல்ல. அவர் அப்படிப் பேசினார் என்பதற்காக நானும் பதிலுக்குப் பதில் அவரையோ, அதிமுகவையோ விமர்சிக்க விரும்பவில்லை.

அப்படியானால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்போது மீண்டும் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேருமா?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது போடப்பட்ட கூட்டணி உடன்பாடு, அந்தத் தேர்தலுக்கு மட்டுமானதுதான். இந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் நான் ஏற்கெனவே சொன்னபடி, கூட்டணி கட்சிகளுடன் பேசி உடன்பாடு காண்பதற்கான கால அவகாசம் இல்லாததால்தான் தனித்துப் போட்டி என்று அறிவித்தோம். அடுத்த தேர்தல் குறித்து மருத்துவர் அய்யா ஆலோசித்து, கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in