
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து கடுமையாக சாடிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நாங்கள் மணிப்பூர் வன்முறை பற்றி கேள்வி கேட்கும் போது, பிரதமர் வெட்கமின்றி நகைச்சுவையுடன் கேலி செய்கிறார் என்று கூறினார்.
மணிப்பூர் வன்முறை குறித்து மக்களவை விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி இன்று கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில், “ பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று சுமார் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் பேசினார். இறுதியில் மணிப்பூர் பற்றி 2 நிமிடங்கள் பேசினார். மணிப்பூர் பல மாதங்களாக எரிகிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன, ஆனால், பிரதமர் சிரித்துக்கொண்டே நகைச்சுவையாகப் பேசுவது அவருக்குப் பொருந்தாது.
மணிப்பூரில் இந்த முட்டாள்தனத்தை இந்திய ராணுவத்தால் இரண்டு நாட்களில் தடுத்து நிறுத்த முடியும். ஆனால், பிரதமர் மணிப்பூரை எரிக்க விரும்புகிறார், தீயை அணைக்க விரும்பவில்லை" என்றார்.
தொடர்ந்துப் பேசிய ராகுல், "பிரதமரின் பேச்சு இந்தியாவைப் பற்றியது அல்ல, அது நரேந்திர மோடியைப் பற்றியது. அவர் தனது கருத்துக்கள், தனது அரசியல் மற்றும் லட்சியங்களைப் பற்றி பேசினார். கேள்வி 2024-ல் அவர் பிரதமராவது பற்றி அல்ல, கேள்வி மணிப்பூர் பற்றி எரிகிறது என்பதைப் பற்றியது. பிரதமர் குறைந்தபட்சம் மணிப்பூருக்குச் செல்லலாம். அங்குள்ள சமூகங்களுடன் பேசலாம், நான் உங்கள் பிரதமர் என்று சொல்லலாம், பேச ஆரம்பிக்கலாம். ஆனால் அவருக்கு எந்த நோக்கமும் இல்லை.
மணிப்பூரில் எந்த உரையாடலும் இல்லை, மணிப்பூரில் முழுமையான வன்முறை நடக்கிறது. முதல் படி வன்முறையை நிறுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர் எதுவும் செய்யாமல் வெட்கமின்றி சிரிக்கிறார்" என்று ராகுல் காந்தி கூறினார்.