நேற்று சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிகண்டனுடன் செல்ஃபி எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இவர் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன் என்றும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டில், “ஒரு சிறப்பு செல்ஃபி... சென்னையில் எஸ்.மணிகண்டனை சந்தித்தேன். அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க பாஜக கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால், அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்.
எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த புதிய விமானநிலைய முனையம், சென்னை - கோவை வந்தேபாரத் ரயில் உட்பட 6,445 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார்.