தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து உத்தரவுகளைப் பெறுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது தெலங்கானாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பாராளுமன்றத்தில் எந்த மசோதா வந்தாலும், டிஆர்எஸ் கட்சி பாஜகவை ஆதரித்து, எதிர்க்கட்சிகளின் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறது. பாஜக மற்றும் சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. உங்கள் முதல்வர் கே.சி.ஆர் தேர்தலுக்கு முன் இப்போது நாடகம் ஆடுகிறார், ஆனால் அவர் பிரதமர் மோடியுடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறார். பிரதமர் மோடி உங்கள் முதல்வருக்கு தொலைபேசியில் உத்தரவிடுகிறார்" என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் இந்தக்கூட்டத்தில் கேசிஆரை தாக்கி பேசினார். அவர், “நாங்கள் பாராளுமன்றத்தில் எந்த மசோதாவை எதிர்த்தாலும், டிஆர்எஸ் பாஜகவை ஆதரிப்பார்கள். ஆனால் அவர்கள் இன்னும் பாஜக அல்லாத அரசை கொண்டு வருவோம் என்று கூறுகிறார்கள். பாஜக அல்லாத அரசை கொண்டு வர வேண்டுமானால், ராகுல் காந்தி தலைமையில் நாங்கள்தான் பாஜக அல்லாத அரசை அமைப்போம்.
பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது, ஆனால் குஜராத்தில் மோர்பியில் இடிந்து விழுந்த பாலங்களைப் போல இன்னும் பல பாலங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதால், குஜராத் தேர்தல் அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை" என்று அவர் கூறினார்.