ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பினை இந்தியா ஏற்றுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறையிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் நாளை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.