தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கத் திட்டமா?- நயினார் நாகேந்திரன் முன்னிலையில் மத்திய அமைச்சர் பதில்

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கத் திட்டமா?- நயினார் நாகேந்திரன் முன்னிலையில் மத்திய அமைச்சர் பதில்

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்போம் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதிரடியாகப் பேசியிருந்த நிலையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் இதுகுறித்து பதில் அளித்துள்ளார்.

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக எம்.எல்.ஏவும், சட்டமன்ற பாஜக குழுத்தலைவருமான நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்துவிடுவோம் என அதிரடியாகப் பேசினார்.

முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் பேசுகையில், “ஆ.ராசா தனி நாடு கேட்போம் என தனியாளாகவே நின்று கேட்கிறார். ஆ.ராசாவுக்கு ஒரு ஆசை இருக்கும் போது, எனக்கும் ஒரு ஆசை இல்லாமல் இருக்குமா? நான் கேட்பேன். தமிழ்நாட்டை இரண்டாக பிரியுங்கள். 234 எம்.எல்.ஏ தொகுதியை தலா 117 தொகுதிகளாகப் பிரிப்போம். தென்பகுதியிலும், வடபகுதியிலுமாக நாங்கள் இரு முதலமைச்சர்கள் வந்துவிடுவோம். பிரிக்கமுடியாது என நினைத்துவிடாதீர்கள். அதைச் செய்யக் கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். நரேந்திர மோடி நினைத்தால் முடியும்” எனப் பேசினார். இது சர்ச்சையும் ஆனது.

இந்நிலையில் நெல்லையில் பாஜக கூட்டத்திற்கு இன்று வந்திருந்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவில் நிலவும் பிரச்சினை உள்கட்சிப் பிரச்சினை. நாங்கள் யார் வீட்டு வாசலையும் எட்டிப் பார்க்கமாட்டோம். மத்திய அரசு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்காது. ஏற்கெனவே தமிழகம் பிரிக்கப்பட்ட மாநிலம் தான்” என்றார். பேட்டியின் போது, மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் அருகிலேயே நயினார் நாகேந்திரன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in