பாஜக தலைமையிலான மத்திய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி கேரளத்தை அழிக்க துடிக்கிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஎஸ்சி தொழிலாளர்களுக்கான மாநில மாநாட்டை இன்று கேரள முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச உரிமைகளையும் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. கேரளத்தை அழிக்கும் நோக்கில் நிதி அடிப்படையிலான நெருக்கடியை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்திய கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து இப்படி நடந்து வருகிறது. இதனால் கேரள அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கடன் வாங்கும் அதிகாரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது கேரளத்தை நிதி நெருக்கடியில் சிக்க வைப்பதற்கான மத்திய அரசின் முயற்சி. மத்திய அரசு, மாநில அரசுகளின் அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் வேலைகளை செய்து வருகிறது. இது நாட்டிற்கு பெரும் சாபக்கேடு. நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதே மத்திய அரசின் கோட்பாடாக உள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசு கூட்டுறவுத் துறையையும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. 10 லட்சம் காலிப் பணியிடங்களை வைத்துக் கொண்டு மத்திய அரசு வேலை வாய்ப்பினை அழிக்க நினைக்கிறது. அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை தங்களது சுய நலத்திற்காக மத்தி அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது” என்றார் காட்டமாக.