மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு: தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை  ரத்து செய்யக்கோரிய மனு: தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சதீஷ்பாபு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1020 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர். தேனி மாவட்டத்தில் கடும் மழைப்பொழிவு காரணமாக 3 போகம் விளைச்சல் நடைபெறுகிறது. செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 125 எம்எல்டி தண்ணீர் எடுக்கும் போது 3 போக விளைச்சல் பாதிக்கப்படும்.

மதுரையின் குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாகவும் மதுரைக்கு குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதனால் முல்லை பெரியாறு லோயர் கேம்பிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றுமனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர் தரப்பில் 1886-ல் போடப்பட்ட 999 ஆண்டு ஒப்பந்தபடி 5 மாவட்ட விவசாயத்துக்கு மட்டுமே முல்லை பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். மதுரை குடிநீர் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடும் பாதிப்பை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், " மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in