கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்’ என தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்,
மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக இன்று குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர், பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களுக்குக்கும் தீவைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
போராட்டக்காரர்கள் கல்வீசித்தாக்கியதில் எஸ்.பி செந்தில் குமார், டிஐஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சின்னசேலம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், அதுவரை பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.