சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு இன்று சந்தித்துப் பேசினார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து ஆதரவை தெரிவித்தேன். இந்த முறை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சுயநலம் கருதாமல் கட்சியின் நலம் கருதியவர் ஓ.பன்னீர் செல்வம். கட்சியையும், ஆட்சியையும் நம்பி ஒப்படைத்த சசிகலாவை அலட்சியப்படுத்தி அபகரித்து கொள்ள சதி செய்தது போல தற்போது சூழ்ச்சி செய்து அதிமுகவின் முழு அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,” எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவுமில்லை. தொண்டர்கள் ஆதரவும் இல்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தாலும் ஓ.பன்னீர் செல்வம் தான் தலைமை ஏற்க வேண்டும். அவர் தலைமை ஏற்றால் சசிகலாவும் ஆதரவு தெரிவிப்பார், அதிமுகவை வலிமைப்படுத்தும் விதமாக சசிகலா மற்றும் டிடிவி.தினகரனையும் சந்தித்து பேச உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.