பணி நிரந்தரம் கிடைக்கும் என முதல்வரை மலைபோல் நம்புகிறோம் - பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

செந்தில்குமார்
செந்தில்குமார் பணி நிரந்தரம் கிடைக்கும் என முதல்வரை மலைபோல் நம்புகிறோம் - பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பணிநிரந்தரம், காலமுறை சம்பளம் போன்ற தங்களது வாழ்வாதார கோரிக்கைகள் நாளைய தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப் படுமா? என்று அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய கல்வி இணைச்செயல்பாடு பாடங்களை கற்றுத் தருவதற்கு கடந்த 2012-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள்  நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரூபாய் 5ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப் பட்டது.

அவர்களில் இதுவரை 4ஆயிரம் பேர் பணியில் இருந்து விலகிவிட்ட நிலையில், தற்போது சுமார் 12ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த  2014-ம் ஆண்டு ரூபாய் 2ஆயிரம், அடுத்து 2017-ம் ஆண்டு ரூபாய் 700, கடைசியாக 2021-ம் ஆண்டு ரூபாய் 2300 என படிப்படியாக உயர்த்திய நிலையில் தற்போது  ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியம் பெறுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது, "கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனுக்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல. மனுக்களை நிறைவேற்றுவது நம்  கடமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் இருந்து  கோரிக்கை மனுக்களை ஆசிரியர்கள்  அனுப்பி வருகின்றனர்.

நாளைய பட்ஜெட்டில் இந்த மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஸ்டாலின் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என எதிர்பார்ப்போடு பகுதிநேர  ஆசிரியர்கள்  உள்ளார்கள். 10 ஆண்டு பணி என்பதையும் கடந்து 12வது ஆண்டாக அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றோம்.

பெரும்பாலோர் 50வயதை கடந்து விட்டார்கள். நிரந்தரம் செய்தால் கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். ரூபாய் 10 ஆயிரம் என்ற குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பு இல்லாமல்  வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். நாளை பட்ஜெட்டில் எங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் என்று முதல்வரை மலை போல் நம்புகிறோம்" என்று செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in