‘இடைக்கால பொதுச்செயலாளர் என்பது தற்காலிகம்தான்’- பண்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி கருத்து

‘இடைக்கால பொதுச்செயலாளர் என்பது தற்காலிகம்தான்’- பண்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி கருத்து

இடைக்கால பொதுச்செயலாளர் என்பது தற்காலிகம்தான். இப்போது அதிமுகவில் நடப்பது எல்லாமே நாடகம்தான் என்று அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “ அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோதிலிருந்தே இரண்டு விஷயங்கள்தான் அதன் உயிர். ஒன்று இக்கட்சி ஏழைகளுக்கானது, மற்றொன்று இது அனைத்து மக்களுக்குமானது. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இடைக்கால பொதுச்செயலாளர் என்பதெல்லாம் தற்காலிகம்தான். எம்ஜிஆர் இருந்தபோது அவரே இக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்ததில்லை. எனவே பொதுச்செயலாளர் யார் என்பது முக்கியமில்லை. நாட்டு மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதே உண்மை. இப்போதுள்ள மாவட்டச் செயலாளர்களை ஈபிஎஸ் நியமித்தார், அவர்கள் இவரை இடைக்கால பொதுச்செயலாளராக ஆக்கியுள்ளனர். அடிப்படை தொண்டர்களால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இப்போது அதிமுகவில் ஒரு நாடகம் நடக்கிறது. அதிமுகவில் இன்னும் அதிகம் குழப்பங்கள் ஏற்படும். இவை இன்னும் பல கட்டங்களை கடந்த பின்னரே ஒரு முடிவு ஏற்படும். எனவே தொண்டர்கள் இந்த சூழலில் அமைதியாக இருக்க வேண்டும். இந்த நிலைமை எல்லாம் விரைவில் மாறும்” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in