விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன. இதில் திமுக ஆறு இடங்களிலும், அதிமுக ஆறு இடங்களிலும், சுயேச்சைகள் இரு இடங்களிலும் ஜெயித்தனர். இதில் சுயேச்சையாக வென்ற பஞ்சவர்ணம் அதிமுகவில் இணைந்தார். இன்னொரு சுயேச்சை திமுகவில் இணைய சமபலம் ஆனது.
இந்த நிலையில் அதிமுக பஞ்சவர்ணத்தை ஒன்றிய தலைவர் வேட்பாளராக்கியது. திமுக, அதிமுக சமபலத்தோடு இருந்ததால் குலுக்கல் நடந்தது. இதில் வென்ற அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒன்றிய தலைவராக இருந்துவந்தார். இந்த ஒன்றியத்தில் மாதாந்திர கூட்டம் நடத்த கடந்த ஏழெட்டு மாதங்களாக கூட்டம் நடத்த போதிய கவுன்சிலர்கள் வரவில்லை. இதனிடையே தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்யப் போவதாக பஞ்சவர்ணம் அறிவித்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றிய கவுன்சிலர்கள் அருப்புக்கோட்டை கோட்டாச்சியர் முன்பு வாக்களித்தனர். அதில் அதிமுக கவுன்சிலர்கள் உள்பட 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்திற்கு எதிராகவும், ஒரு கவுன்சிலர் மட்டுமே ஆதரவாகவும் வாக்கு அளித்தனர். இதனால் பஞ்சவர்ணம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.