நெல்லையில் பாஜக நிர்வாகி ஜெகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு கும்பல் ஒன்று வெறித்தனமாக ஜெகனை வெட்டிக் கொலை செய்தது.
இக்கொலை வழக்கில் நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஷ்வரியின் அண்ணன் செல்லத்துரையின் மகனும், நகர திமுக துணை செயலாளருமான பிரபு உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெகனின் கொலை சம்பவத்தை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.